சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியில் உள்ள வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேசசபையின் வரவு செலவுதிட்ட பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வியடைந்துள்ளது
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 05, சிறிலங்கா சுதந்திர கட்சி 04, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபி.ஆர்.எல்.எப் 03, ஐக்கிய தேசியக் கட்சி 02, தமிழ் தேசிய மக்கள் முன்னனி 01, முஸ்லிம் காங்கிரஸ் 01, பொதுஜன பெரமுன 01 என 17 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக உள்ளனர்.
எனவே 2021 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பாதீடு தொடர்பான இரண்டாவது வாக்கெடுப்பு இன்றைய தினம் செட்டிக்குள பிரதேசசபையில் நடைபெற்றது.
கடந்த 12.11.2020 அன்று நடைபெற்ற 2021 இற்கான வரவுசெலவுதிட்ட பாதீட்டுக்கான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 7 பேரும் எதிராக 9 பேரும் வாக்களித்திருந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகமளிக்காததன் காரணமாக பாதீடு தோல்வியடைந்திருந்தது.
இந் நிலையில் இன்று (23) வரவு செலவு திட்டத்தில் சில மாற்றங்களுடன் இரண்டாவது தடவையாக வாக்கெடுப்பு நடைபெற்றது. கடும் கருத்து மோதல்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த வரவுசெலவு திட்ட பாதீடானது இரண்டாம் முறையும் தோல்வியடைந்தது. இதற்கு ஆதரவாக 7 பேரும் எதிராக 9 பேரும் , முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர் நடுநிலை வகித்து வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.