கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் : நகர்த்தல் பிரேரணை தொடர்பான வழக்கு நாளை

Court 2
Court 2

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தடை உத்தரவு தொடர்பான நகர்த்தல் பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணை நாளை இடம்பெறவுள்ளது.

இன்றைய தினம் குறித்த பிரேரணை சட்டத்தரணிகள் ஊடாக முன்வைக்கப்பட்டது. குறித்த பத்திரத்தை விசாரணைக்காக எடுத்துக்கொண்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சின்னப்பு சிவபாலசுப்ரமணியம் குறித்த விசாரணையை நாளைய தினத்திற்கு திகதியிட்டுள்ளார்.

கடந்த 20ம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் 17 பேருக்கு இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு விடயங்களை உள்ளடக்கி காவல்துறையினரால் வழக்கு தொடரப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் அடங்கலாக 17 பேருக்கு இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த தடை உத்தரவுக்கு எதிரான நகர்த்தல் பிரேரணை இன்று கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட நீதவான் நிதிமன்ற நீதிபதி இன்றைய தினம் நீதமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாத நிலையில் பதில் நீதவான் குறித்த பிரேரணை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் அனைவரும் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக சமூகமளித்திருந்தனர். இந்த நிலையில் குறித்த வழக்கு நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.