சூறாவளி மற்றும் வெள்ளம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

01 11
01 11

மட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்கும் வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை விசேட கூட்டம் நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எல்.எம்.நௌபர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.அஜ்மீர், வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், செயலக உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான முன் ஆயத்தங்களுடன் மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட சம்மந்தப்பட்ட சகல திணைக்கள உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் இருக்கும் வகையில் பணிப்புரை வழங்கப்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் இந்நிலையில் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்படுமாயின் அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுகாதாரப் பகுதியினரின் ஆலோசனைகளும் அவர்களது பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக கரையோரப் பிரதேசங்களிலும், வெள்ள அனர்த்தம் ஏற்படும் பிரதேசங்களிலும் இருக்கும் மக்கள் அவதானத்ததுடன் இருக்கும் படியும், மீனவர்கள் எதிர்வரும் சில தினங்களுக்கு கடலுக்குச் செல்லாமல் இருக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விவசாய செய்கைக்கு சென்றவர்களை உடனடியாக தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்புமாறும், வீடுகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான முறைகளுக்கு அமைய இருப்பதுடன், தங்களது வீடுகள் மூலம் ஆபத்து வரும் நிலை காணப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தல் வழங்குமாறு அரச உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.