இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் மிக்கி ஆர்த்தர் நியமிக்கப்படவிருக்கின்றார்.
மிக்கி ஆர்த்தர் நேற்றைய தினத்திலிருந்து தனது பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிக்கி ஆர்த்தரின் ஆளுகைக்குள் வரும் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இம்மாதம் 8 ஆம் திகதி அந்நாட்டிற்குப் பயணமாகின்றது.
மிக்கி ஆர்த்தர் இலங்கை கிரிக்கெட் அணி பற்றி அறிந்து கொள்ள இலங்கை வீரர்களுடன் சிறிது காலம் இணைந்திருக்க வேண்டிய காரணத்தினால் ருமேஷ் ரத்நாயக்கவே பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வரும் வரை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்காலிகமாக செயற்படவிருக்கின்றார்.
அதேவேளை பாகிஸ்தான் செல்லும் மிக்கி ஆர்த்தர் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியின் ஆலோசகர்களில் ஒருவராக காணப்படுவார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்த்தர் மாறிய பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக கிரண்ட் ப்ளவர் செயற்படவுள்ளதோடு, டேவிட் சேக்கர் பந்துவீச்சு பயிற்சியாளராக கடமையாற்றவிருக்கின்றார். அதேநேரம், ஷேன் மெக்டோர்மட் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணியேற்கவுள்ளார்.