ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் போட்டித்தடை

russia
russia

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவிற்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய வீரர், வீராங்கனைகள் அரசின் ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகவும், அதனை அந்த நாட்டு ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் கண்டும் காணாமல் விட்டுவிட்டதாக 2016ம் ஆண்டில் பிரச்சினை எழுந்தது.

இதனை அடுத்து ரஷ்ய வீர-வீராங்கனைகள் சர்வதேச போட்டியில் ரஷ்ய நாட்டு கொடியின் கீழ் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு கடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் கொடியின் கீழ் பொதுவான வீரர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த தடையை நீக்க கடந்த ஆண்டில் எடுத்த முடிவு சர்ச்சையானது. இந்த நிலையில் ரஷ்யா மீதான ஊக்க மருந்து விவகாரம் குறித்து உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விசாரணை நடத்தியது.

ரஷ்ய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனத்தின் ஊக்க மருந்து சோதனை மையத்தில் உள்ள மாதிரிகளை உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் மாதிரிகளில் ரஷ்ய ஊக்க மருந்து சோதனை மையம் குளறுபடி செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து விரிவாக ஆய்வு செய்த உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் மறுஆய்வு சங்கம் சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்க பரிந்துரை செய்தது.

இதனால் அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் 2022ம் ஆண்டில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க முடியாது. ஊக்க மருந்து சோதனையில் தேறும் ரஷ்ய வீரர், வீராங்கனைகள் பொதுவான வீரர்களாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் கொடியின் கீழ் தான் பங்கேற்க முடியும்.

அத்துடன் ரஷ்ய அரசு அதிகாரிகள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தடை காலத்தில் ரஷ்யா எந்தவித சர்வதேச போட்டியும் நடத்த முடியாது. சர்வதேச போட்டிகளை நடத்த விண்ணப்பமும் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டில் கட்டாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா கலந்து கொள்ள முடியுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.