இந்த ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடர் சம்பந்தமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விசேட வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மாதம் 29ஆம் திகதி இணைய வழியாக இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் யூன் மாதம் முதலாம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கலந்துரையாடல் ஒன்று இது சம்பந்தமாக இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்த கூட்டம் நடைபெறும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இடம்பெற உள்ளது.
எனினும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்ற நிலையில் இந்த விடயம் சம்பந்தமாக முக்கிய அவதானம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெயர் குறிப்பிடாத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, ஒக்டோபர் மாதமளவில் இந்தியாவின் கொவிட் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாத சூழ்நிலையில், மைதானங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படுமாயின் இறுதி தருணத்திலேயே அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நிலவுகின்ற கொவிட் பரவல் தீவிர நிலை காரணமாக ஐபிஎல் தொடர் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.