இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி, மழை காரணமாக சமநிலையில் முடிவடைந்தால், வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான வழியை சர்வதேச கிரிக்கட் பேரவை கண்டறிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவஸ்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி சதம்டனில் ஆரம்பமான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி, சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
முதலாம் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டமும், போதிய வெளிச்சமின்மை காரணமாக இடையிடையே இடைநிறுத்தப்பட்டது.
போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது, 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி, அன்றைய ஆட்டநேர முடிவின்போது, 2 விக்கட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நான்காம் நாள் ஆட்டமும், மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டமும், மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.