ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டம் இரண்டாவது சுற்று ஆரம்பம்

download 1 34
download 1 34

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளன (யூ.ஈ.எப்.ஏ.) ஐரோப்பிய கிண்ணம் கால்பந்தாட்டத் தொடரின் லீக் சுற்று நேற்றைய தினத்துடன் முடிவுற்றது. இரண்டாவது சுற்று நாளைய தினம் இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் பிற்போடப்பட்டிருந்த ஐரோப்பிய கிண்ணம் கால்பந்தாட்டத் தொடர் இம்முறை 11 நாடுகளின் 11 நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.

ஏ,பீ,சீ,டீ,ஈ,எப் என 6 குழுக்களில் தலா 4 அணிகள் பங்கேற்ற முதல் சுற்றின் நிறைவில் 16 அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி ‍பெற்றன.

தத்தம் குழுக்களில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 12 அணிகள் நேரடியாக தெரிவு செய்யப்பட்டன.

இதன்படி குழு ஏயில் இத்தாலி மற்றும் வேல்ஸும், குழு பீயில் பெல்ஜியம் மற்றும் டென்மார்க்கும், குழு சீயில் நெதர்லாந்து மற்றும் ஒஸ்ட்ரியாவும், குழு டீயில் இங்கிலாந்து மற்றும் குரோஷியாவும், குழு ஈயில் சுவீடன் மற்றும் ஸ்பெய்னும், குழு எப் இல் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் முன்னேறின.

எஞ்சிய அணிளிலிருந்து சிறந்த இடங்களை வகிக்கும் 4 அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. இதில் எச் குழுவின் போர்த்துக்கல், டி குழுவின் செக் குடியரசு, ஏ குழுவின் சுவிட்ஸர்லாந்து, சீ குழுவின் உக்ரைன் ஆகியன தகுதி பெற்றுக்கொண்டன.

லீக் சுற்றில் இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய 3 அணிகளும் தாங்கள் பங்கேற்ற 3 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி தலா 9 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இங்கிலாந்து (7 புள்ளிகள்), சுவீடன் (7 புள்ளிகள்), ஸ்பெய்ன் (5புள்ளிகள்), பிரான்ஸ் (5புள்ளிகள்) ஆகிய 4 அணிகளும் பங்கேற்ற 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவாத ஏனைய அணிகளாக உள்ளன. அதாவது இந்த 4 அணிகள் போட்டியை தோல்வியடையாது சமநிலையில் முடித்துள்ளன.

நாளைய தினம் இரவு 9.30 மணிக்கு ஆரம்பாகும் இப் போட்டியில் வேல்ஸ் மற்றும் டென்மார்க் அணிகள் மோதிக்கொள்வதுடன், இப்போட்டியைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் இத்தாலி அணியை ஒஸ்ட்ரியா அணி எதிர்கொள்ளும்.