23 வயதுக்குட்டபட்ட ஆசிய கால்பந்தாட்ட கிண்ண தகுதிகாண் போட்டித் தொடரில் சிரிய அணியுடனான போட்டியில் 5க்கு 0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இலங்கை, தனது இரண்டாவது போட்டியில் போட்டி ஏற்பாடு நாடான கட்டாரை இன்றைய தினம் எதிர்த்தாடவுள்ளது.
இப்போட்டி இன்று இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கட்டார் நாட்டு தலைநகரான தோஹாவில் நடைபெறும் ஏ குழுவுக்கான தகுதிகாண் போட்டித் தொடரில் இலங்கை, கட்டார், யேமன், சிரியா ஆகிய நாடுகளின் 23 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன.
கட்டார் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் இலங்கை தடுப்பாட்ட உத்தியை கடைப்பிடித்து கள வியூகங்களை மேற்கொள்ளும் என்றும், கட்டார் அணிக்கெதிராக இலங்கை அணி ஒரு கோலையேனும் அடித்தால் அது இலங்கைக்கு கிடைக்கும் பெரு வெற்றியாகும் என கால்பந்தாட்ட விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இலங்கை மற்றும் கட்டார் அணிகளின் போட்டியையடுத்து சிரியா மற்றும் யேமன் அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கை நேரப்படி 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.