முதல் போட்டியில் 187 ஓட்டங்களினால் மே.இ.தீவுகளை வீழ்த்தியது இலங்கை!

FFBqpPlXIAIcUTM
FFBqpPlXIAIcUTM

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 187 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதன் முதல் போட்டி கடந்த 21 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸுக்காக 133.5 ஓவர்களை எதிர்கொண்டு 386 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 85.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

இதனால் 156 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 40.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று டிக்ளே செய்தது.

இந்த முடிவுகளின் அடிப்படையில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வெற்றிக்கு 348 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றியிலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை நேற்று ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள், நான்காம் நாள் ஆட்டம் நிறைவில் 25.3 ஓவர்களில் 52 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

போட்டியின் ஐந்தாம் நாளான இன்று ஆரம்பிக்க மேற்கிந்தியத்தீவுகளின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 296 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உள்ளது.

ஆடுகளத்தில் பொன்னர் 18 ஓட்டங்களுடனும், ஜோசுவா டா சில்வா 15 ஓட்டங்களுடனும் ஐந்தாம் நாள் ஆட்டத்துக்காக தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடினர்.

மதிய நேர உணவு இடைவேளையின் போது மேற்கிந்தியத்தீவுகள் மேலதிகமாக ஒரு விக்கெட்டினை பறிகொடுத்து 125 ஓட்டங்களை பெற்றிருந்தது.

மதிய நேர உணவு இடைவேளையின் பின்னர் மேற்கிந்தியத்தீவுகள் அணி 79 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 187 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் அதிகபடியாக ஜோசுவா டா சில்வா 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, பொன்னர் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களை குவித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் பந்து சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்தெனிய 4 விக்கெட்டுகளையும், பிரவீன் ஜெயவிக்ரம ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை 1:0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.