வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் முதலிடம்!

நடப்பாண்டுக்கான வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலிடத்தையும், ஆண்கள் அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் 02ஆம் திகதி தொடக்கம் 05ஆம் திகதி வரை நடாத்தப்பட்ட இந்த போட்டியில் வடமாகாண அனைத்து மாவட்டங்களுக்குமிடையிலான குத்து சண்டை போட்டியிலேயே முல்லைத்தீவு மாவட்ட அணியினர் முதலாவது மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் பெண்கள் அணியினருக்கான போட்டியில் வவுனியா மாவட்டம் இரண்டாமிடத்தையும், மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

ஆண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தை வவுனியா மாவட்டமும், மூன்றாமிடத்தினை மன்னார் மாவட்டமும் பெற்றுக்கொண்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட அணியில் உண்ணாப்பிலவு, தீர்த்தகரை, செல்வபுரம், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, விஸ்வமடு, கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய பிரதேச வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.