நெதர்லாந்தில் ஐந்து வாரங்களுக்கு கடுமையான ஊரடங்குக்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து பிரதமர் இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.
தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பண்டிகை காலங்களில் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்தப்போவதாக ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது. முதன் முதலில் ஜேர்மனி இதே போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.
நெதர்லாந்தில் உள்ளவர்கள் வீட்டிலே இருக்க வேண்டும், வேலைக்குச் செல்லக் கூடாது, மற்றவர்களுடன் முடிந்த வரை தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பகல் நேர பராமரிப்பு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள், சினிமா திரையரங்குகள், சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் உட்பட அனைத்து பொது இடங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம்19ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, பல்பொருள் அங்காடிகள் மற்றும் வங்கிகள் திறந்த நிலையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகள் அனைத்தும் ஜனவரி 18 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.