கோட்டாபய இந்தியாவுக்குள் நுழையாதே- வைகோ

3 ge
3 ge

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கு வரும் விஜயத்தை எதிர்த்து நவம்பர் 28 ஆம் நாள் தலைநகர் தில்லியில் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவுக்கு ஆளான ஈழத்தமிழர்கள், நாதி அற்றுப் போனோமா நாம் என்று பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ அமைச்சராக இருந்த ஈவு இரக்கம் அற்ற கொலைபாதகன் கோட்டாபய, இப்போது இலங்கை அதிபர் ஆகி இருக்கின்றார், முன்னாள் அதிபரை பிரதமராக அறிவித்து, அவரிடமே இராணுவப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டார்.

சிங்களர்களால்தான் நான் வெற்றி பெற்றேன் என்றதுடன், முதல் அறிவிப்பாக, தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் தெருக்களில் வலம் வர வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்து விட்டார்.

தமிழ் ஈழம் சிங்களர்களின் இராணுவக் கூடாரம் ஆகி விட்டது.

காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் தமிழர்களின் கதி என்ன? என்ற வேதனை நம்மை வாட்டுகின்றது.

இந்தியாவில் எட்டுக் கோடித் தமிழர்கள் வாழ்கின்றோம். அதைத் துளியும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இந்தியாவின் மத்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைத்து, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்தும் சொல்லி,

முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருக என அழைப்பும் விடுத்து இருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ சாஞ்சிக்கு வந்தபோது, 1500 கிலோ மீட்டர் கடந்து சென்று, கருப்புக்கொடி காட்டிக் கைதானோம். 2014 இல், நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்புக்கு மஹிந்த ராக்பக்ஷ வந்தபோது, தலைநகர் தில்லியில் கருப்புக்கொடி காட்டிக் கைதானோம்.

நமக்கு உணர்ச்சி செத்துப் போய்விடவில்லை. நம் நரம்புகள் மரத்துப் போய்விடவில்லை.

தமிழ்ச் சாதி, நாதி அற்ற இனம் அல்ல என்பதை, உலகத்திற்குப் பிரகடனம் செய்யும் வகையில், வருகின்ற நவம்பர் 28 ஆம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புது தில்லி ஜந்தர் மந்தரில், ஈழத்தமிழ் இனக் கொலைகாரனே, இந்தியாவுக்குள் நுழையாதே என்ற முழக்கத்துடன், அறவழியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.

கழகக் கண்மணிகள், இந்தக் குறைந்த கால அவகாசத்தில் வர முடிந்தவர்கள், தில்லிக்கு வாருங்கள். குண்டடிபட்டுக் கொத்துக்கொத்தாக மடிந்து போன ஈழத்தமிழர்களுக்காகக் கண்ணீர் சிந்துகின்ற நாம், நம் அறப்போரை மேலும் கூர்மை ஆக்குவோம்.

கழகக் கண்மணிகள், ஈழத்தமிழ் உணர்வாளர்கள் இந்த அறப்போரில் பங்கேற்பதோடு, நாங்கள் மேற்கொள்ள இருக்கின்ற அறப்போராட்டத்திற்குத் தமிழ்ச் சமூகம் தோள்கொடுத்துத் துணை நிற்கவேண்டும் என இரு கரம் கூப்பி, பணிவுடன் வேண்டுகிறேன்.