இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அந் நாட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் உழவு இயந்திர பேரணி நடத்தப்பட்டபோது இதில் கடும் வன்முறை வெடித்தது.
இதன் போது விவசாயிகளில் ஒரு தரப்பினர் காவற்துறையினரால் அனுமதிக்கப்பட்ட பாதைகளை மீறி தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேறினர்.
அதன்பின்னர் விவசாயிகள் தங்கள் அமைப்பின் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர். இதன் போது காவற்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இம் மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இவ் வன்முறை தொடர்பாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வன்முறை தொடர்பாக தொலைபேசி மற்றும் சிசிடிவிக்களில் பதிவான 1700 வீடியோக்கள் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக டெல்லி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கு, காசியாபூர், திக்ரி ஆகிய எல்லைப் பகுதிகளில், இன்று நள்ளிரவு வரை,இணைய சேவை துண்டிப்புத் தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொது அமைதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.