இந்தியத்துணை உயர்ஸ்தானிகருடன் கருணா, பிள்ளையான் தனித்தனிப் பேச்சு!

india
india

இந்தியத் துணை உயர்ஸ்தானிகருடன் கருணா, பிள்ளையான் தனித்தனிப் பேச்சு!

இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்புக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கும் இடையில் நேற்று தனித்தனியாக பேச்சு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாணசபை முறைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டன.

அத்தோடு எதிர்கால வளர்ச்சி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக போர்ச் சூழலில் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்கள், ஊனமுற்றோருக்கான வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது, இந்தியத் துணை உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான நீண்டகால அபிவிருத்திக் கூட்டாண்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிப்பிட்டார்.

மேலும், 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபையை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைவதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுதான் முன்னோக்கு என்று இந்திய அரசின் நிலைப்பாட்டைத் துணை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார்.