பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லூசோன் தீவை நேற்று ‘கம்முரி’ தாக்கியது. மணிக்கு 241 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும். அவர்களுக்கான அத்தியவசிய தேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சூறாவளியினால் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களையும் பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இது இந்த வருடம் பிலிப்பைன்ஸை தாக்கும் 20வது சூறாவளியாகும்.
கனமழையை தொடர்ந்து நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளமையினால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
புயல் மற்றும் கடும்மழை காரணமாக தலைநகர் மணிலாவில் உள்ள விமானம் நிலையம் 12 மணி நேரத்துக்கு மூடப்பட்டுள்ளது. இதனால் 500 இற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
புயல் தாக்கிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கப்பல் போக்குவரத்தை நிறுத்த பிலிப்பைன்ஸ் கடலோர காவல் பிரிவு உத்தரவிட்டு உள்ளது.
இதனால் சுமார் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
புயல் மற்றும் கடும்மழை மேலும் தொடரலாம் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் 6 மாகாணங்களில் பாடசாலைகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.