2050-ம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள்

1588652565968
1588652565968

உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு பாதிப்புகள் காரணமாக காது கேட்கும் திறன் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் செவிதிறன் பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில் 2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அடுத்த மூன்று தசாப்தங்களில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 1½ மடங்குக்கும் மேலாக அதிகரிக்கக் கூடும். 2.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும். இது 2019-ம் ஆண்டில் 1.6 பில்லியனாக இருந்தது.

2.5 பில்லியன் மக்களில் 700 மில்லியன் பேர் 2050-ம் ஆண்டுக்குள் சிகிச்சைகள் தேவைப்படும் அளவுக்கு தீவிரமான நிலையை எட்டக்கூடும். இந்த சிகிச்சை அளவு 2019ஆம் ஆண்டில் 430 மில்லியனாக இருந்தது.

செவிதிறன் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அதை தீர்ப்பதற்கான கவனிப்பு அணுகல் பற்றாக்குறை ஆகும். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சிகிச்சை அளிக்க குறைந்த வல்லுணர்களே உள்ளனர்.

இதுபோன்ற நாடுகளில் காது கேளாமை உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவில்லை. பணக்கார நாடுகளில் கூட, செவித்திறன் பிரச்சினையில் சிகிச்சை சீரற்றதாக இருக்கிறதென அதில் கூறப்பட்டுள்ளது.