மியன்மாரில் 614 பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக்கொலை

myanmar military coup
myanmar military coup

இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மியன்மாரில் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்வடைந்துள்ளதாக மியன்மார் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.

மியன்மாரில் போராட்டங்களை அடக்க இராணுவம் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும் மியன்மாரில் இராணுவத்திற்கு எதிரான பொது மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மியன்மாரில் ஒரே நாளில் 82 பேரை இராணுவம் சுட்டு கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாகோ நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் ஒரே நாளில் 82 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் 14 ஆம் திகதி யான்கூன் நகரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு மேற்கொண்டதில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர் ஒரே நாளில் அதிகபட்சமாக பாகோ நகரில் 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மியன்மாரில் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளதாக மியன்மார் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 46 பேர் சிறுவர்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஷான் மாநிலத்தின் நாங்கமோன் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிப் படை உள்ளிட்ட இனக்குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் 10 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.