தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஆந்திர சட்டசபையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் அம்மாநில அரசு 2 புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
- ஆந்திர மாநில திஷா சட்டம் – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குறிப்பிட்ட
குற்றங்களுக்கான ஆந்திர சிறப்பு நீதிமன்றங்கள் 2019, - ஆந்திர திஷா சட்டம் – குற்றவியல் சட்டம் (ஆந்திர திருத்தம்) 2019 ஆகிய இரண்டு மசோதாக்கள் ஆந்திர சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
இதன்படி பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டம் ஆந்திர மாநில சட்டசபையில் இன்று நிறைவேறியது. இந்த சட்டம், பாலியல் வழக்குகளை 14 நாட்களுக்குள் விசாரித்து முடிக்கவும், 21 நாட்களுக்குள் தீர்ப்பளிக்கவும் வகை செய்கிறது.
முன்னதாக பாலியல் குற்றவழக்குகளை விரைந்து முடிக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.