இந்தியாவில் கங்கை ஆற்றில் மிதக்கும் சடலங்கள்

download 37
download 37

இந்தியாவில் பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் அழுகிய நிலையில் 50 – 100 சடலங்கள் வரை மிதந்து கொண்டிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உடல்கள் அனைத்தும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக சுற்றுப்புற கிராமத்தினருக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள மகாதேவ் காட் எனும் பகுதியின் வழியாக செல்லும் கங்கை ஆற்றில் 50 முதல் 100 சடலங்கள் வரை மிதந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த உடல்கள் 5 முதல் 7 நாட்கள் வரை தண்ணீரில் ஊறியிருக்கலாம் எனவும் சடலம் முழுவதும் சிதைந்து மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், ஆற்றங் கரைகளில் ஒதுங்கிய சடலங்களை நாய்கள் கடித்துக் கொண்டிருந்ததாகவும் பகுதி வாசிகள் தெரிவித்தனர்.

பீகாரின் பக்ஸர் மாவட்டம் உத்தரப்பிரதேசத்தின் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதனிடையே கங்கை ஆற்றில் மிதந்து வந்த சடலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்தவை என பீகார் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்ஸர் மாவட்டத்தின் சவுசா வட்டார அலுவலர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,

தகவல் கிடைத்து மகாதேவ் காட் சென்று பார்த்தபோது கங்கை ஆற்றில் சடலங்கள் வரிசையாக மிதப்பதை பார்த்தோம். நாங்கள் 40 முதல் 50 சடலங்களை பார்த்திருப்போம்.

ஆனால் 100க்கும் மேலான சடலங்கள் சென்றிருப்பதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். இவை உத்தரப்பிரதேசத்தின் எந்த நகரில் இருந்து வந்தது என்று விசாரணை நடத்துவோம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில் கங்கை ஆற்றில் பல்வேறு உத்தரப்பிரதேச மாவட்டங்கள் அமைந்துள்ளன. இவை எங்கிருந்து வந்தவை என தெரியாது.

என்ன காரணத்திற்காக இந்த சடலங்கள் நதியில் தூக்கி எறியப்பட்டன என்பதும் தெரியாது. இவை கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களா? என்பதும் தெரியாது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது வரை 15 உடல்களை கைப்பற்றியுள்ளோம். உடல்களை பாதுகாப்பாக அடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இது குறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், இந்த சடலங்கள் அருகாமையில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்களால் ஆற்றில் தூக்கி எறியப்பட்டவையாக இருக்கலாம். சிகிச்சை அளிக்கப்படாமல் வீட்டிலேயே இறப்பவர்களின் சடலங்களை நதியில் தூக்கி எறிந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.