வறிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள் வழங்கும் ஜி7 நாடுகள்

samayam tamil 5
samayam tamil 5

பிரித்தானியா சார்பில் முதற்கட்டமாக 50 இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

இதில், பருவநிலை மாற்றம், பொருளாதாரம், கொரோனா தொற்று, புவிசார் அரசியல் குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெருந்தொற்று காலத்தில், பணக்கார நாடுகளான ஜி7 நாடுகள், உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. அமெரிக்கா 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இதனிடையே பிரித்தானியா முதல் 50 இலட்சம் தடுப்பூசிகளை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திலும் மேலும் 2.5 கோடி தடுப்பூசிகளை இந்த ஆண்டு இறுதியிலும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், சுமார் 80 சதவீத தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ளவை இருதரப்பு ரீதியாக பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.