சீனாவில் ‘மங்கி பி வைரஸ்’ தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
கொரோனாவை தொடரந்து தற்போது சீனாவில் பரவி வரும் இந்த வைரஸ் குரங்கிடம் இருந்து மனிதனுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 2 குரங்குகள் திடீரென இறந்ததையடுத்து, அவற்றின் உடற்கூறுகள் விலங்கியல் ஆய்வுக்கூடத்தில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
இதனையடுத்து, ஆய்வுகூடத்தில் பணியாற்றிய 53 வயதான கால்நடை மருத்துவர் ஒருவர் சில நாட்களுக்கு பின்னர் நோய்வாய்ப்பட்டார்.
இவரது எச்சில், குருதி மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘குரங்கு பி’ வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்று வந்தாலும், அவை பலனளிக்காததால் அவர் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகளிலிலிருந்து 1932 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இது நேரடி கழிவுகள், சுரப்பிகள் மூலம் பரவும் என கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் இறப்பு சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
எனவே குரங்கு மற்றும் ஏனைய மிருகங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், ஆய்வு மைய பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சீனாவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மனிதர்களை ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கும் போது 1 முதல் 3 வாரங்களில் நோய் அறிகுறிகள் தென்படும். பின்னர் அது மத்திய நரம்பு தொகுதியை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.