ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவவீரர்களின் அணிவகுப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் பலியானார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றி வந்தத நிலையில் இறுதியாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் அருகே தலீபான்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள சார் தாரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் அமெரிக்க இராணுவ வீரர்களின் அணிவகுப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க வீரர் ஒருவர் பலியானார்.
இந்த தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.
தலீபான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் அமெரிக்க வீரர் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.