அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கு இடையிலான வரலாற்று ஒப்பந்தத்தை சீனா விமர்சித்துள்ளது.
அது மிகவும் பொறுப்பற்ற செயற்பாடு என்றும், குறுகிய நோக்கம் கொண்டதாகும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவும், பிரித்தானியாவும் முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கவுள்ளன.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்சியாக இது பரவலாக பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஸாவோ லிஜன், இந்தக் கூட்டணி பிராந்திய அமைதியை கடுமையாக பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆயுதப் போட்டியை தீவிரப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்