பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற்ற சர்வதேச உணவு கண்காட்சியில் ஜனாதிபதி இம்மானுவேல் நேற்று கலந்துகொண்டார்.
பின்னர் கூட்டத்தின் நடுவே அவர் நடந்துசென்றபோது நபரொருவரால் வீசப்பட்ட முட்டையொன்று அவரது தோள்பட்டை மீது விழுந்தது. எனினும் அந்த முட்டை அவர் மீது உடைந்து விழாமல் அவரின் தோள்பட்டையில் பட்டு கீழே விழுந்தது. இதனையடுத்து அங்கிருந்த மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
அத்துடன், ஜனாதிபதி மீது முட்டை வீசிய நபரை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். ‘அந்த நபருக்கு என்னிடம் ஏதாவது கூற இருப்பின், அவர் தாராளமாக முன்வரலாம்’ என்று ஜனாதிபதி மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்நபர் இந்த தாக்குதலின் பின்னணி தொடர்பில் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதேவேளை, முன்னதாக கடந்த யூனில் ஜனாதிபதி மெக்ரோன் நாட்டில் தென் கிழக்கு பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது, அங்கிருந்த நபரொருவர் எதிர்பாராத விதமாக அவரை கன்னத்தில் அறைந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.