இந்தியாவுக்குள் பிரவேசிக்கும் சகல பிரித்தானிய பிரஜைகளும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரித்தானியா விதித்துள்ள விதிகளுக்கு இணையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தரப்பு அறிவித்துள்ளது.
இந் நிலையில் இந்தியாவுக்குள் பிரவேசிக்கும் பிரித்தானிய பிரஜைகளுக்கு மூன்று தடவை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் பிரித்தானிய பிரஜைகள் தனிமைப்படுத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் சுகாதார தரப்பினருக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பிரித்தானியா அறிவித்திருந்தது.
இந்த விடயத்திற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில் புதிய தனிமைப்படுத்தல் விதிகளை அமுல்படுத்தியுள்ளது.