ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று இரண்டு பாரிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவங்களில் குறைந்தபட்சம் 19 பேர் பலியானதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்தார் மொஹமட் தாவுத் கான் இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக குறித்த ஊடங்கள் தெரிவிக்கின்றன.
இரு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதை தலிபான் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இராணுவ வைத்தியசாலையின் வாயிலுக்கு அருகில் ஒரு குண்டும், வைத்தியசாலைக்கு அருகில் மற்றைய குண்டும் வெடித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தலிபான்களின் பாதுகாப்பு படையினரை குறிவைத்து ஐ.எஸ். அமைப்பின் ஹரோசன் பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.