2070 ஆம் ஆண்டளவில் இந்தியா, பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும் என அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தின் – க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் கொப்26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது உலக அளவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 20 ஆண்டுகள் தாமதமாகும்.
அதேநேரம், பருவநிலை மாற்றத்துக்கு, கூட்டு முயற்சியின் ஊடாகவே தீர்வு காண முடியும்.
காபன் உமிழ்வு தொடர்பான உறுதியை இந்தியா தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பருவநிலை மாற்றத்தில் வாழ்வியல் முறைகளும் முக்கிய அம்சமாக இருக்கின்றன.
பல பாரம்பரிய சமூகங்கள் இயற்கையோடு இசைந்து வாழும் அறிவைப் பெற்றுள்ளன.
குறித்த அறிவு அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமானால் அதனை மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் உள்வாங்க வேண்டும்.
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தமது எரிசக்தித் தேவையில் 50 சதவீதம் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் பெறும் என்பதுடன், குறித்த காலப்பகுதியில் காபன் உமிழ்வில் ஒரு பில்லியன் டன் அளவைக் குறைக்கும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.