அமெரிக்கா – சீன வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர ஏற்பாடு

102218399 175257138
102218399 175257138

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஏற்படுத்திக்கொள்ள ஒப்பந்தம், எதிர்வரும் 15ஆம் திகதி கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இதற்கமைய இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதன் பலனாக கடந்த மாதம் 14ஆம் திகதி இரு நாடுகள் இடையே முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சீன இறக்குமதி பொருட்கள் மீதான கூடுதல் வரியை அமெரிக்கா இரத்து செய்தது. அதேபோல் சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பை நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் இதற்கான ஒப்பந்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘தலைநகர் வொஷிங்டனில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த முதற்கட்ட ஒப்பந்தம், இரு பொருளாதார சக்திகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கும் என்று நம்புகின்றேன்.

முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் சீனாவுக்கு சென்று இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளோம்’ என கூறினார்.