நாய் இறைச்சி விற்பனையைத் தடை செய்வது குறித்து, ஆய்வுசெய்து அறிக்கையளிக்க, அனைத்து பிரதிநிதிகள் அடங்கிய செயலணியொன்று அமைக்கப்படும் எனத் தென் கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தென் கொரியாவில், ஆண்மையைப் பெருக்கும் என்ற நம்பிக்கையில், நாய் இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. எனினும், தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் செல்லப்பிராணியாக நாய் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதனால் 10 – 20 ஆண்டுகளுக்கு முன்னர், பல இலட்சக்கணக்கான நாய்கள் உணவுக்காக கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஒரு வருடத்தில் 10 – 15 இலட்சம் நாய்கள் மட்டுமே கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே – இன் அண்மையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு அந்நாட்டு நாய்ப் பண்ணையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நாய்க் கறிக்கு தடை விதிப்பது குறித்து பல தரப்பிடமிருந்து கருத்து அறிய, ஏழு அமைச்சுகளை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை பிரதிதிநிதிகள் அடங்கிய செயலணியொன்று அமைக்கப்படும் என தென் கொரிய ஜனாதிபதி அறிவித்துள்ளார்.