இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மனைவியின் செல்லப் பெயரை பக்கத்து வீட்டு பெண் தனது நாய்க்கு வைத்ததால், கோபமடைந்த நபர் அந்த பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீடாபென் சர்வையா (35) என்ற பெண்மணி செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளதுடன், அந்த நாய்க்கு ‘சோனு’ எனப் பெயரிட்டு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் அயலவரான சுராபாய் பர்வத் என்பவரும் தனது மனைவியை செல்லமாக ‘சோனு’ என அழைத்து வந்துள்ளதுடன், இந்த பெயர் காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று நீடாபென் இளைய மகன் உடன் வீட்டில் இருந்த போது, அங்கு 5 பேருடன் சென்ற சந்தேக நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதுடன், அவரை தாக்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்கப்பட்ட குறித்த பெண் சமையலறைக்கு சென்று தப்பிக்க முயன்றுள்ளதுடன், சந்தேக நபருடன் வந்த மற்றுமொரு நபர், அங்கிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து நீடாபென் மீது ஊற்றி தீவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பற்றிய நிலையில் அலறிய குறித்த பெண்ணை மீட்ட அயலவர்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன், அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இரு வீட்டாருக்கும் இடையில் நீர் பிரச்சினை தொடர்பில் முரண்பாடு இருந்ததாகவும், தற்போது நாய்க்கு வைக்கப்பட்ட பெயரால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.