பங்களாதேஷில் சுமார் ஆயிரம் பேரை ஏற்றிச் சென்ற கப்பலொன்று தீ விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் டாக்காவில் இருந்து தெற்கே 200 கி.மீ தொலைவில் ஜலோகாட்டி மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மேலும் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் தொடர்பான மோசமான பராமரிப்பு, கப்பல் கட்டும் தளங்களில் பாதுகாப்புத் தரமின்மை மற்றும் கப்பலில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறெனினும் தீ விபத்தில் காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதனால் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.