30 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் 8 பேர் கைது

1645419543 drug 2
1645419543 drug 2

இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு காவற்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் காவற்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து காவற்துறையினர் சோதனை செய்ததில் அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் ஐஸ் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை,அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை காவற்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.