எல்லைப்பகுதியில் படைகளைக் குவித்து ஏற்கெனவே இருக்கும் நிலையை சீனா மாற்ற முயன்றால் அது எல்லைப்பகுதியில் அமைதியை மட்டும் குலைக்காது. இரு நாட்டு உறவிலும் தொடர் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சீனாவுக்கான இந்தியத்தூதுவர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினைக் குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா – சீனா இருதரப்பு உறவில் முன்னேற்றத்துக்கு எல்லையில் அமைதி மற்றும் வன்முறையற்ற சூழலைப் பராமரிப்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். இந்தப் பிரச்சினையில் தீர்வை நோக்கித்தான் இந்தியாவின் செயற்பாடு இருக்கிறது.
கல்வான் பள்ளத்தாக்கை சீனா உரிமை கொண்டாடுவது முட்டாள்தனமானது. இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற மிகைப்படுத்தப்படுத்தப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தற்போதுள்ள சூழலை அமைதிப்படுத்த உதவாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.