சூடானின் மேற்கு டார்பூரில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் மோதலில் சிக்கியுள்ள பிராந்தியத்திற்கு அதிகளவான படையினரை அனுப்புவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டுப் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர் மசாலிட் சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து, வீடுகளையும், உள்ளூர் சந்தையின் ஒரு பகுதியையும் சூறையாடி எரித்தனர் என்றும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டரி மீதான தாக்குதலைத் தொடர்ந்து, சுமார் 500 உள்ளூர் மக்கள் அதிகாரிகளிடமிருந்து கூடுதல் பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்தினர்.
இதனால் ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் அப்தல்லா ஹம்தோக், குடிமக்களையும் விவசாய பருவத்தையும் பாதுகாக்க மோதல்களால் பாதிக்கப்பட்ட டார்பூருக்கு பாதுகாப்புப் படைகளை அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.