இந்திய வீரர் பலி: இந்தியா-வங்கதேசத்திற்கிடையில் பேச்சுவார்த்தை

india
india

வங்காளதேச எல்லை பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, இருநாட்டு எல்லைப் பாதுகாப்பு படை தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சர்வதேச எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 3 பேரை வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையினர் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களில் 2 பேரை மட்டும் விடுதலை செய்துள்ளனர்.

இதையடுத்து வங்காளதேச படையினரால் கைது செய்யப்பட்ட மீனவரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 6 பேர் கொண்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் படகு ஒன்றில் சென்று வங்காளதேச வீரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் சென்ற வேளையில் வங்கதேச படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்ததுடன் மற்றொரு இந்திய வீரர் படுகாயமடைந்த நிலையில். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் இரு நாட்டு எல்லை பாதுகாப்புப்படை தலைவர்கள் நேற்று வங்காளதேச தலைநகர் டாக்காவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அந்நாட்டு உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியா-வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையினர் இடையேயான உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால் தற்போது நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தவறுதலாக நடந்த இந்த சம்பவம் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு படை தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என நம்பிக்கை உள்ளது. எல்லை பாதுகாப்பு படைகளுக்கு இடையேயான பிரச்சனையை கண்டறிந்து அதை இரு நட்பு நாடுகளும் அமைதி ரீதியில் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

இதற்கிடையில், வங்காளதேச எல்லை பாதுகாப்புப்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய படையினர் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் ஆகையால் தற்காப்புக்காகவே பதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளது.

ஆனால் வங்காளதேச படையினரின் கூற்றை மறுத்துள்ள இந்திய எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி, இந்திய படையினர் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டு கூட சுடப்படவில்லை. மாறாக வங்காளதேச வீரர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் நமது வீரர் உயிரிழந்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், வங்காளதேச வீரர்களால் கைது செய்யப்பட்ட மீனவர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.