சர்வகட்சி சபை குறித்து சஜித் ஆலோசனை

1 saaa
1 saaa

நாட்டிலுள்ள ஊழல், மோசடி மற்றும் குற்றச் செயல்கள் என்பவற்றை ஒழிப்பதற்காக சர்வகட்சி சபையொன்றை அமைத்து அதனை ஜனாதிபதி செயலணியுடன் இணைத்து இயங்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்ற வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடனான இரண்டு மணி நேர சந்திப்பின்போதே சஜித் பிரேமதாச இதனைக் கூறியுள்ளார்.

இது வர்த்தக சமூகத்தவர்களுக்கும் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான ஒரு நேரடிச் சந்திப்பாகவும் கேள்வி பதில் கலந்துரையாடலாகவும் இது காணப்பட்டுள்ளது.

நாட்டில் ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும். குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அண்மைக் காலங்களில் ஊழல், மோசடிகளில் ஓரளவு குறைவு காணப்பட்டாலும் அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் இன்னமும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதில் நான் பதவிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

சட்டங்களை மீறிச் செயற்படுவோர் மீது எந்தவித தயவு தாட்சண்யமும் காட்டமுடியாது. நாட்டை சுபீட்சமுள்ளதாக புதிய இலங்கையாக உருவாக்கும் எனது திட்டத்துக்கு தடைக்கல்லாகவிருக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.