காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார். இறவாப் புகழ் கொண்ட பாடகர் எஸ்.பி.பி. அவர்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி.யின் மறைவு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம்!
கொரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அற்புத இசைக்கலைஞனைப் பிரித்துவிட்டது. பரபரப்பான உலகில் மக்களின் மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து எஸ்.பி.பி.
16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பிற்குரியவர்.
தம்பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துரையினருக்கும், இரசிகர்களுக்கும் தி.மு.க. சர்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.