ஜப்பானில் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஷுரி கோட்டை உள்ளது. அங்கு ஏற்பட்ட தீயினால் கோட்டையின் பெரும்பகுதிகள் தீயில் எரிந்து சாம்பலாகின
1429 முதல் 1800 ம் ஆண்டுகளில் இருந்த ரியுக்யு பேரரசின் கோட்டையாக இருந்தது. பின்பு இது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டது. இது கடந்த 2000ம் ஆண்டு யுனெஸ்கோவால் பழமை வாய்ந்த புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.40 மணியளவில் கோட்டையில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தீ அதிக அளவில் பரவியதால் அருகில் வசித்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். கோட்டையின் பெரும்பகுதிகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
தீ எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.