மனைவியை கொன்று விட்டு சடலத்துடன் லொறி மீது மோதி தற்கொலை!

பிரித்தானியர் ஒருவர் தமது மனைவியை கொன்று விட்டு, கேம்பர் வாகனத்தில் சடலத்துடன் லொறி மீது மோதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜிப்ரால்டர் அருகே லாஸ் பேரியோஸில் ஏ -381 நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

அடையாளம் தெரியாத 38 வயது சாரதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபரின் 41 வயதான பிரெஞ்சு மனைவியின் உடல் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்டது.

ஆனால், உடற்கூராய்வு முன்னெடுக்கப்பட்டதில், அந்த பெண்மணி இறந்து சில நாட்கள் கடந்துள்ளதாக தெரிய வந்தது.

இதனையடுத்து, அந்த பிரித்தானியர் தமது மனைவியை கொன்று விட்டு வேண்டுமென்றே தமது கேம்பர் வாகனத்தை லொறி மீது மோதவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், அந்த கேம்பர் வாகனம் தவறான திசையில் பயணப்பட்டதாகவும், பின்னர் எதிரே வந்த கனரக லொறி மீது மோதியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.