பிரபல நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ள குஷ்பு தாம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னைப் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியின் உயர்பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் தெரியாதவர்கள் ஒடுக்குகின்றனர்.
பணம் புகழை பெறுவதற்காக நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்தேன்.
காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன். கட்சியில் இருந்து விலகினாலும் உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும். ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு எனது நன்றி என குஷ்பு தெரிவித்துள்ளார்.