ஆப்கானிஸ்தானில் விமானத்தாக்குதல் ; 12 சிறுவர்கள் பலி!

ஆப்கானிஸ்தானின் தகார் மாநிலத்தில் மதபாடசாலையொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானதாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கிராமமொன்றில் அமைந்திருந்த மத்ரஸாவின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகள் மசூதியின் இமாமும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தாக்குதல் இடம்பெற்றவேளை இமாமும் மாணவர்களும் மாத்திரம் மசூதியிலிருந்தனர் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட உடல்கள் அனைத்தும் சிறுவர்களின் உடல்கள் என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் மாநில ஆளுநரின் பேச்சாளரும் உறுதிசெய்துள்ளன.

எனினும், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை நிராகரித்துள்ளதுடன் தலிபான் தீவிரவாதிகளே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 30ற்கும் அதிகமான ஆப்கான் படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.