ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை – ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம்

ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்காவின் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசுக்கு எதிராக ரஷ்யா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அதன் சோதனை பல கட்டங்களாக நடந்துவருகின்றன.

அமெரிக்காவின் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த மாத இறுதியில் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், 2ஆம் கட்ட பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அந்த நிறுவனம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது.

இந்த நிலையில், ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அந்த நிறுவனத்தின் பொது சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் ருக்ஸாண்ட்ரா டிராகியா அக்லி, தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்காக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.