7 போ் விடுதலை தொடர்பில் வைரமுத்து டுவிட்டரில் கருத்து!

ஏழு தமிழர்கள் விடுதலை தாமதமாவதற்கு யார் காரணம் என்பது தமிழக ஆளுநருக்கு தெரியும் என கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களின் விடுதலை தாமதமடைவது ஏன் என வைரமுத்து தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

எழுவர் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கருணை காட்டுகின்றது. தமிழக அமைச்சரவை முன்னரே தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. எங்களுக்கு மறுப்பில்லை என காங்கிரஸ் கட்சியும் பெருந்தன்மை காட்டுகின்றது. இந்நிலையில் இந்த விடுதலைக்கு தடையார் என்பது ஆளுநருக்கே தெரியும் என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு வைத்து இரண்டு வருடங்களாகியுள்ள போதிலும் இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எதனையும் எடுக்காதது குறித்து உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.