இராவணனை இராமரும் சீதையும் வென்றதைப்போல் நாமும் கொரோனாவை வெல்வோம் – பிரித்தானியப் பிரதமர்

இராவணனை இராமரும் சீதையும் வென்றதைப்போன்று நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ( Boris johnson ) தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் ‘உலக தீபாவளி திருவிழாக் கொண்டாட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

“ஒளியைக் கொண்டு இருளை வெற்றி கொள்வது எப்படி, நன்மையை கொண்டு தீயவற்றை தோற்கடிப்பது எப்படி என்பதே தீபாவளி பண்டிகை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்.

இராமரும், சீதையும் இராவணனை எவ்வாறு வதம் செய்து உலகுக்கு ஒளியை பரப்பினார்களோ, அதேபோல நாமும் கொரோனா வைரஸை வெற்றிகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு மக்கள் தீபாவளியை கொண்டாடுவதில் சிரமப்படுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன், அதேசமயம் மக்களின் தியாகங்களும் சரியானதை செய்வதற்கான உறுதியும் உண்மையில் உயிர்களை காப்பாற்ற உதவுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.