அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் டொனால்ட் ட்ரம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை அமெரிக்க தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்
அமெரிக்க தேர்தல் அதிகாரிகளினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பானதொரு தேர்தலாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றமைக்கான எந்தவொரு ஆதாரமும் கிடையாது எனவும், அமெரிக்க தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுமார் 2 தசம் 7 மில்லியன் வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும் அமெரிக்க தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.