ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் முலம் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபதி. தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருக்கும் இவர், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் ஆவார். நடிகர் ராணாவுக்கு அபிராம் டகுபதி என்கிற சகோதரரும் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் ராணாவின் சகோதரர் அபிராம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்க உள்ளாராம். மேலும் அபிராம் டகுபதியின் தந்தை சுரேஷ் பாபு தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார். கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். நடிகர் அபிராம் டகுபதி, ஸ்ரீ ரெட்டியின் மீ டூ புகாரில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் அறிமுகமாகும் படம் பற்றி அபிராம் கூறும்போது, “என்னையும் நடிகனாக்கி பார்க்கவேண்டும் என்பது என் தாத்தாவின் ஆசை. அவர் உயிரோடு இருந்திருந்தால் அது முன்கூட்டியே நடந்திருக்கும். தற்போது எனது தந்தையின் ஆதரவுடன் நான் கதாநாயகனாக அறிமுகமாகிறேன்” என தெரிவித்துள்ளார்.