‘800’ படத்திலிருந்து விலகுமாறு விஜய் சேதுபதிக்கு சீமான் வலியுறுத்து!

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வரலாற்று படத்திலிருந்து விலக வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் தற்போது விஜய் சேதுபதி அவர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் முரளிதரன் சிங்களவர்களுக்கு சாதகமாவர் எனவும் திட்டமிட்ட அரசின் இனப்படுகொலையை அவர் நியாயப்படுத்திக் கூறிய ஒருவர் என்பதாலும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு பல்வேறு அரசியல் அமைப்புத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது அவரது திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல; எனவே உடனடியாக அப்படத்தில் இருந்து விலகும் முடிவை அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் முத்தையா முரளிதரன் பற்றி தம்பிக்கு நாம் சொல்லத்தேவை இருக்காது. அவரே புரிந்து கொண்டு படத்தில் இருந்து விலகுவார் என தான் நான் அமைதி காத்தேன். ஆனால் படத்தினுடைய அடுத்த கட்ட பணிகள் தொடங்கியிருப்பதால் தம்பிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன். முத்தையா ஒரு விளையாட்டு வீரன் மட்டுமல்லாமல் உலகளாவிய புகழ் வெளிச்சத்தை கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையும், இன ஒதுக்கல் கொள்கையையும் நியாயப்படுத்தி பேசியவர்.

தமிழர் என்ற இன அடையாளத்தை பயன்படுத்தும் சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலியாக இருந்து வருபவர், 2 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, பிணக் காடாய் மாறி ரத்த சகதியில் எம் உறவுகளின் உடல்களும் மரண ஓலங்களும் கேட்ட நொடிப்பொழுதில் எவ்வித தயக்கமும், குற்றமும் இன்றி இனவழிப்பு செய்யப்பட்ட நாளை மகிழ்ச்சிகரமான நாளாக கருதுகிறேன் என அறிவித்த முத்தையா முரளிதரன் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ஷ நல்லாட்சி தருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனால் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளிதரன் உட்பட எவருமே தமிழகத்தில் விளையாடுவதற்கு முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தடை விதித்திருந்தது தம்பி சேதுபதி அறியாததா? அதுவெல்லாம் தெரிந்திருந்தும், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் நடிக்க முன் வந்ததை எப்படி நம்மால் ஏற்க முடியும்?

அது வரும் காலங்களில் விஜய் சேதுபதியின் மற்ற படங்கள் வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். எனவே தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படத்தில் இருந்து முற்றிலுமாக விலகுகிறேன் எனும் அறிவிப்பை விஜய் சேதுபதி வெளியிடவேண்டும் என அன்போடு அறிவுறுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.