ஈழப் பற்றாளர் எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்

kovai gani
kovai gani

ஈழப் பெற்றாளரும் மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான கோவை ஞானி இன்று காலமானார். அவருக்கு வயது 86.

கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, விஆர்வி நகரில் வசித்துவந்த கோவை ஞானிக்கு இன்று மதியம் 12.45 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அச்சமயம் அவர் மகன் பாரிவள்ளல் அருகில் இருந்துள்ளார்.

‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கோவை ஞானி எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார்.

கோவை ஞானியின் இயற்பெயர் கி.பழனிசாமி ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றினார்.

மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டவர். கோவை ஞானி – இந்திராணி தம்பதிக்கு இரண்டு மகன்கள். மனைவி இந்திராணி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.

இவர் தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஈழவிடுதலைப் போராட்டம் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்ட இவர், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் ஈழ இலக்கியங்களை போற்றியும் எழுதியுள்ளார்.

புலிகள் இயக்கம்மீது மிகுந்த மதிப்பினை கொண்ட இவர், ஈழத்து எழுத்தாளர்களுடன் மிகுந்த நெருக்கத்தையும் கொண்டிருந்தார்.

நீரிழிவு பாதிப்பு காரணமாகக் கண் பார்வையை இழந்த நிலையிலும், இறுதி மூச்சு உள்ளவரை இலக்கியப் பணியாற்றினார்.