கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் அலுவலகம் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களால் 01.01.2021 நண்பகல் 12.00 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புதிய பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு பின்னர் பிரதேச செயலகங்களிலும் ஆரம்பிக்கப்ட்டுள்ள நிலையில் தற்போது அதற்கென தனி அலுவலகம் அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் மாவட்டத்தில் சிறந்த தொழில் முயற்சியாளரான சாயிராணி அவர்களை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நோக்கில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் முதன் முறையாக காண்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தொழில்முனைவோரை உள்ளடக்கியதாக ஆவணப்பட எழுத்துருக்கள் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவற்றுள் அமைச்சினால் குறித்த ஆவணப்படம் சிறந்த கதையாக தெரிவு செய்யப்பட்டு, அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணப்படம் பற்றிய மீள்பார்வை தொடர்பான கருத்துரைகள் மற்றும் அடுத்தாண்டுத் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப்பணிப்பாளர் ப.தர்மேந்திரன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அவர் தனது உரையில், தொழில் முனைவோர்கள் தொழில் முயற்சியான்மை மூலம் நுட்பங்களை பயன்படுத்தி சாயிராணி போன்று மாவட்டத்தில் பல சாயிராணிகள் உருவாக வேண்டும் : தொழில் வாய்ப்புக்களை வழங்கி பலரை முன்னேற்றி தாமாகவே தொழிலை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் இதன்போது பிரதேச செயலகத்தின் தொழிற்துறை திணைக்களத்தினால் தொழில் முயற்சியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படமும் காண்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.